சூறாவளியோடு நெருங்கும் புயல்!அடுக்கு மாடி கட்டுமானத் தளங்களில் என்ன செய்ய வேண்டும்.!சிஎம்டிஏ முக்கிய அறிவிப்பு
சென்னையை புயல் நெருங்கி வரும் நிலையில் அடுக்குமாடி கட்டுமானத் தளங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சிஎம்டிஏ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
![CMDA has issued an announcement regarding precautionary measures to be taken when the storm makes landfall KAK CMDA has issued an announcement regarding precautionary measures to be taken when the storm makes landfall KAK](https://static-ai.asianetnews.com/images/01hgqbzxcj3g1km7dkqxazgp0g/whatsapp-image-2023-12-03-at-1-45-31-pm_363x203xt.jpg)
சென்னையை நெருங்கும் புயல்
மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. மேலும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டும் வருகிறது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
எச்சரிக்கை விடுத்த சிஎம்டிஏ
இன்றும் (03.12.2023) நாளையும் (04.12.2023) கடுமையான “மிக்ஜாம் சூறாவளி மழை” முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, விபத்துகள் மற்றும் மனித உயிர் இழப்புகளைத் தடுக்க ஒவ்வொரு “பல அடுக்கு மாடி கட்டுமானத் தளங்களிலும்” பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி, (1) பைல் ரிக்குகள் தரையில் நங்கூரமிடப்பட வேண்டும். (2) கிரேன் பூம் / ஏற்றம் குறைக்கப்பட வேண்டும். (3) டவர் கிரேன் பூம் சுழற்சியைத் தவிர்க்க பூட்டப்பட வேண்டும். (4) உயரமான கூரைகளில் உள்ள பொருள் அகற்றப்பட வேண்டும். (5) ஃப்ளெக்ஸ் பேனரைக் குறைக்க வேண்டும் அல்லது காற்றின் பாதையில் எதிர்ப்பைத் தவிர்க்க வேண்டும்.
கிரேன்களின் உயரம் குறைக்க வேண்டும்
(6) அனைத்து தற்காலிக சாதனங்களும் சரி செய்யப்பட வேண்டும். (7) அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.(8) வெல்டிங் செய்யக்கூடாது.(9) பொதுவாக, அனைத்து வேலைகளும் தளத்தில் நிறுத்தப்பட வேண்டும். அவசரகாலத்தில், தொழிலாளி தனது தலையில் கடினமான ஹெல்மெட் அணிந்தபடி மட்டுமே கட்டுமானப் பகுதியில் செல்ல வேண்டும். (10) ஆபத்தான முறையில் ஊசலாடும் மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என சிஎம்டிஏ வலியுறுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்