இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் லட்சக்கணக்கான மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். காலம் காலமாக மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் அவர்களை, அவ்வப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தாக்கியும், மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியும், படகுகளை சிறைபிடித்தும் அட்டூழியம் செய்து வருகிறது. அப்படி பல்வேறு காலக்கட்டங்களில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட இருப்பதாக இலங்கை அண்மையில் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 7 ஆம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8 ஆம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகள், பிப் 9 ஆம் தேதி கிராஞ்சியில் 24 படகுகள், பிப்.10 ஆம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளும் மற்றும் பிப்ரவரி 11 ஆம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் ஏலம் விட இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகளை தடம்புரள செய்வதாக இலங்கை அரசின் நடவடிக்கை உள்ளது. மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடி படகுகள் இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.