இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவர்கள் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதை இந்தியப் பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 7-2-2022 அன்று, மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து இலங்கை மயிலாட்டி கடற்படைத் தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவது குறித்து பலமுறை மத்திய அரசிடம் முறையிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும் சேர்த்து, இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ளனர் என்றும் 79 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் அப்பகுதியின் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் மாறுதல்களை ஏற்படுத்தி வருவதால், இந்த பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 29 மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை தொடர்ந்து பிரதமர் மோடிக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
