ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப்பின், வருமான வரி செலுத்துவோர் தங்கள் கணக்கில் செய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து சரிபார்த்துக் கொள்ள வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு தங்களுக்கு தெரியாமல் ஏதேனும் டெபாசிட்கள், கணக்கில் வராத பணம் இருந்தால், அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமான வரித்துறை வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

 கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டது. அதன்பின், வருமான வரிசெலுத்துவோர்கள் கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து வருமான வரித்துறை சார்பில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில், வருமானவரி செலுத்துவோர் தங்கள் வருமான கணக்குக்கு தொடர்பில்லாத டெபாசிட்கள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

அதற்கு முன்பாக, வருமானவரி செலுத்துவோர், தங்கள் கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஒரு முறை ஆய்வு செய்ய வருமன வரித்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால், வருமான வரித்துறை அதிகாரிகளால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, வருமானவரி செலுத்துவோர், ஆன்-லைனில் தங்கள் கணக்கை சரிபார்க்கும் ஒரு தளத்தை வருமான வரித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. incometaxindiaefiling.gov.in என்ற தளத்தில் சென்று, வருமான வரி செலுத்துவோர் தங்களின் பான் கார்டு எண்ணை டைப் செய்தால், 2016, நவம்பர் 9ந் தேதியில் இருந்து, டிசம்பர்30ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்களின் விவரம் வரும்.

அதில் தங்கள் கணக்கில் இருந்து செய்யப்பட்ட டெபாசிட்களுக்கும், பான் எண்ணுக்கும் தொடர்பு சரியாக இருக்கிறதா?, அல்லது, பான் எண்ணுக்கும், கணக்குக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், வருமான வரித்துறைக்கு புகார் அளிக்க தனி வசதி தளத்தில் தரப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கும், பான் எண்ணும் ஒரே மாதிரியாக இருந்து, டெபாசிட் செய்யப்பட்ட பணம் தவறாக இருந்தால், அது குறித்து சரியான டெபாசிட்டை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம். இதற்காக இணையதளத்தில் தனி வசதி தரப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினரிடம் புகார் அளிக்க நேரடியாக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தின் விவரங்களையும் வரி செலுத்துவோர் குறிப்பிட வேண்டும். அது யாரிடம் இருந்து பெறப்பட்டது?, கடனாக பெறப்பட்டதா?, அல்லது பரிசாக வந்ததா? அல்லது நன்கொடையாக பெறப்பட்டதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

மேலும், விவசாயத்தின் மூலம் பெறப்பட்டதா? அல்லது முந்தைய சேமிப்பா?, வருமானமா? என்பதையும் குறிப்பிட வேண்டும். அந்த தகவல்கள் வரிசெலுத்துவோரின் வருமான கணக்குக்கு பொருந்தாத பட்சத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.