Children stopped form school Everyone can joined classes again...
தேனி
தேனியில் உள்ள குள்ளப்புரம் கிராமத்தில் குடும்பச் சூழல் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 22 சிறுவர் - சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் வயதுக்கேற்ப வகுப்புகளில் சேர்க்க உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லாத குழந்தைகள், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகளை கண்டறியும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆறு முதல் 14 வயது வரையுள்ளவர்கள் பள்ளிப் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக இந்த வயதுடையவர்கள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளார்களா? பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார்களா? என்று கண்டறியப்படும்.
அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் பள்ளிகளில் சேர்த்து கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தோடு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஊழியர்களும் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், 6 முதல் 18 வயது வரையுள்ளவர்களில் பள்ளி செல்லாதவர்கள் மற்றும் இடைநின்றவர்கள் கண்டறியப்படுகின்றனர்.
இந்த பணிகள் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. தேனி மாவட்டத்தில் உள்ள 8 வட்டார பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், இதுவரை மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். இதில், பெரியகுளம் தாலுகாவுக்குட்பட்ட குள்ளப்புரம் கிராமத்தில் மட்டும் 22 சிறுவர் - சிறுமிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்.
இவர்களில், 6 முதல் 14 வயது வரையுள்ள 11 பேரும், 15 முதல் 18 வயது வரையுள்ள 11 பேரும் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும் விசாரித்தனர். குடும்பச் சூழல் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் இருந்து 6 மாத காலம் வரை பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் அனைவரையும் வயதுக்கேற்ப வகுப்புகளில் சேர்க்க அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்தப் பணிகள் மே 31-ஆம் தேதி வரை நடக்கிறது.
