நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள்.! மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்ட நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக இரண்டு முறை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும், ஒன்று முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. சுமார் 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர்.
வெற்றி பெற அரசு துணை நிற்கும்
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்! நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்துள்ளார். இதே போல பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்ம் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற அமைச்சர் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மாணவர்களுக்கு பஸ் பாஸ்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறையுடன் பேசி முடிவெடுக்கப்படும் அதே நேரத்தில் பள்ளி சீருடையில் இருந்தாலே பேருந்தில் இலவசமாக மாணவர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படியுங்கள்
மேட்டூர் அணை திறப்பு..! டெல்டா பாசனத்திற்காக 3வது முறையாக திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்