கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அன்றைய தினமே இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த அசம்பாவிதம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூரில் சம்பவம் நடைபெற்ற அதே நாளில் இரவு நேரத்தில் அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “கரூரில் சம்பவத்தன்றே 39 பேர் உயிரிந்தனர். அவர்கள் அனைவரது உடலையும் வைப்பதற்கு பெரிய அளவிலான குளிர்சாதன வசதிகள் மருத்துவமனையில் கிடையாது. மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அதன் அடிப்படையிலேயே இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பற்றாக்குறையை போக்க திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனடியாக கரூருக்கு வரவழைக்கப்பட்டு 5 மேசைகளில் உடற்கூறாய்வு நடைபெற்றது என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தில் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே போன்று தான் கரூர் விவகாரத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.