கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் பழனிசாமி காவேரி மருத்துவமனை வருகை தந்துள்ளார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து நலம் விசாரித்தார். சேலத்தில் இன்று நடைபெறவிருந்த நிழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி, திமுக தலைவரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வருகை தருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒருவாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துவமனையில் 4–வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்றும், சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தொண்டர் வருகை அதிகரித்தது.
பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதனிடையே இன்று சேலத்தில் நடைபெற இருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து நேற்றிரவு சென்னை திரும்பினார். இந்நிலையில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து நலம் விசாரித்தார்.