கொளத்தூரில் ஆலங்கட்டி மழை… குதூகலத்தில் குழந்தைகள்…
பல ஆண்டுகளுக்குப் பின் சென்னை கொளத்தூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும், பொது மக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானில் இருந்து விழுந்த ஆலங்கட்டிகளை குழந்தைகளும், பெரியவர்களும் கையில் எடுத்து வைத்துக் கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே பெய்தது, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி , திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரளவு பெய்தது. சென்னை உட்படி பிற மாவட்டங்களில் இன்று வறட்சியே நிலவி வருகிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கோடைக்காலம் கடந்த பின்னரும் கத்திரி வெயில் காலம் போல் செப்டம்பர் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலான மழைப்பொழிவு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி வந்தது. இன்று சென்னையின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் மூன்று மணியில் இருந்து தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, வில்லைவாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் , இந்த மழையால் தட்பவெப்ப நிலையில் இருந்த வெப்பம் மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவிவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே கொளத்தூர் பகுதியில் நேற்று மாலை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்தன, திடீரென குளிர்ந்த காற்று விசியது. அப்போது திடீரென வானில் இருந்து ஆலங்கட்டிகள் சடசடவென விழத் தொடங்கின. ஒரு பத்து நிமிடங்கள் வரை பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் குதூகலமடைந்த குழந்கைகளும், பெரியவர்களும் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை கொளத்தூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.