காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014ம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பிறகும் இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விளக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளே எதிர்பார்த்த அளவு ஒழுக்கத்தை பேணாதபோது காவல் துறைக்கு எதிராக பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அவர்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் காவல்துறை மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே கருப்புப் பிலிம் பயன்படுத்துவது, காவல்துறை பெயரை அவர்களது வாகனங்களில் தவறாக பயன்படுத்துவது, தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்வது போன்றவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்களிடையே உள்ளதாகவும், ஆனால் அரசால் கவனிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ள நீதிபதி, இவற்றில் பல குற்றச்சாட்டுகள் பொது வெளியில் கிடைத்தாலும், அரசாங்கத்தால் கவனிக்கப்படாமல் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது தளத்தில் தகவல்கள் இருக்கும்போது, காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும், அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுபவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், சமூகத்தில் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இவை சீரழிவுக்கும் மற்றும் அரசியலமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காணவும், அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.