பெண்களை இழிவுப்படுத்திய பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai HC orders registration of case against Ponmudi: திமுகவின் மூத்த அமைச்சர் பொன்முடி சைவ வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருத்தக்க வகையில் பேசியது கடும் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொன்முடியின் பேச்சை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்து இருந்தார்.
பொன்முடியின் அருவருத்தக்க பேச்சு
தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் பொன்முடி பொறுப்பு வகித்த துணை பொதுச்செயலாளர் பதவியை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பறித்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பொன்முடி, தன்னுடைய பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையே பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் பேச்சுக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்தார். பெரிய பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? என்று கூறிய நீதிபதி, அவரது பேச்சு முழுவதும் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை
பொன்முடி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களுடன் துணை நிற்பேன்! வக்ஃபு சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு!
ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?
மேலும் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரிய தமிழக டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதே பேச்சை வேறு ஏதேனும் எவரேனும் பேசி இருந்தால் இதற்குள் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
நீதிபதி அதிரடி உத்தரவு
இதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இதன்பின்பு இந்த வழக்கை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
