சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை !
மகா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில் சென்னையில் விடிய, விடிய மைழு கொட்டி வருகிறது. இததையடுத்து சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
மழை காரணமாக நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோர் சிரமப்பட்டனர். சென்னையின் மைய பகுதிகளான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் மற்றும் தியாகராயநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், கொடுங்கையூர், மாதவரம், மூலக்கடை, அடையாறு, திருவான்மியூர் என சென்னை முழுவதும் நேற்றும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது. சில இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மீனம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.
திருவொற்றியூர் கலைஞர்நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஜீவன்லால் நகர் பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. எர்ணாவூர் பிருந்தாவன் நகர் விஸ்தரிப்பு பகுதியில் ஆறுமுகம் உள்பட 3 பேரின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
கோயம்பேடு பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட்டில் கடைகள் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்தே காணப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிககளும் மிகுந் சிரமத்திற்கு ஆளானார்கள். தொடர்ந்து ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.