சென்னையில் வெளுத்து வாங்கும் மழை… தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை….தீபாவளி பர்ச்சேஸ் பாதிப்பு !!
வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் தற்போது கனமழை கொட்டி வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்தார்.
சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. நேற்று நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை,கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, தரமணி, அண்ணாநகர், அடையாறு , கொடுங்கையூர், அயனாவரம், பெரம்பூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைநதுள்ள நிலையில், வியாபாரிகளும், திபாவளி பர்ச்சேஸ் செய்ய வந்தவர்களும் மிகுந்த அவதிப்பட்டனர். தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற மக்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர்.
இதே போல் பிளாட்பாரத்தில் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.