"பால் கலப்பட வழக்கை விசாரிக்க கூடாது" - சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் நெருக்கடி
விழுப்புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பாலில் கலப்படம் செய்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க, உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
கடந்த 2014ம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து கொண்டு வரப்படும் ஆவில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 9ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, பாலில் கலப்படம் செய்த வாகனத்தின் உரிமையாளர் வைத்தியநாதனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மேல் முறையீட்டு மனுவை ஒப்பந்ததாரர் வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி போலீசார், சம்பந்தம் இல்லாமல் தன்னை கைது செய்ததாகவும், போலீசாரின் குற்றப்பத்திரிகை முன்னுக்குப்பின் முரணாகவும் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும் சிபிசிஐடி போலீசாரிடம் விசாரித்தபோது, பாலில் கலப்படம் செய்யப்பட்ட வழக்கில், அதனை கொண்டு சென்ற வாகனம் வைத்தியநாதனுக்கு சொந்தமானது என்றும், இந்த வழக்கை தடை செய்ய கூடாது எனவும் எடுத்துரைத்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை, உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும், தற்போது பாலில் கலப்படம் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை முறையாக விசாரிக்க உத்தரவிட்டது.