ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்பொழுது உலக நாடுகளில் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வகை தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த தொற்று கண்டயறியப்பட்டுள்ளது. எனவே, வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒமைக்ரான் குறித்த தகவல் அறிந்ததும் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டது. மேலும் ஒமைக்ரான் தொற்றை தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.