ரசாயன கலவை வெளியேறியதற்கு காரணம் இது தானாம்!! - பரபரப்பு தகவல்கள்!!
சென்னை ராயபுரத்தில் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென சிமெண்ட் ரசாயன கலவை நுரையுடன் பொங்கி வந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதற்காக பழைய வண்ணாரப்பேட்டை முதல் தண்டையார்பேட்டை வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
மேற்கு கல்லறை சாலையை சேர்ந்தவர் கலீல் ரகுமான். கடந்த 2 நாட்களுக்கு முன், இவரது வீட்டின் முன்புறம் ஆழ்துளை கிணறு அமைத்தார். ஆனால், அதில் தண்ணீர் வரவில்லை. இதனால், அந்த பள்ளத்தை சரிவர மூடாமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 5 மணியளவில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வெளியே வந்தனர். அப்போது, கலீல் ரகுமான் வீட்டின் முன்புறத்தில் இருந்து சில அடி தூரத்துக்கு சிமெண்ட் கலவை பரவி இருந்தது. இதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், பீதியடைந்த பொது மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறினர். அந்த கலவையில் இருந்தது துர் நாற்றம் அடிப்பதால் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ரசாயன கலவை வீடுகளுக்குள் இருந்து வீதிகளில் வெளியேறி வருகிறது.
தகவலறிந்து மெட்ரோ பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஆய்வு செய்து, ரசாயன கலவையை அகற்றும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு சரி செய்தனர்.