சென்னை பாரிமுனையில் தனியார் வங்கிகள் உள்ள 5 மாடி கட்டடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர். இதுவரை தீயை அணைக்க முடியாமல், வீரர்கள் திணறி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னையால் அனைத்து வங்கி கிளைகளிலும் மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. வங்கிகளின் ஊழியர்களும் பல நாட்களாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை பாரிமுனை பகுதியில் இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் பேங்க் உள்பட பல அரசு வங்கிகளும், 2வது கடற்கரை சாலையில் ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்களில், பல்வேறு தனியார் வங்கிகள் செயல்படுகின்றன. இங்கு தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்காக வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் பாரிமுனை 2வது கடற்கரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில், ஒவ்வொரு தளத்திலும் தனியார் வங்கிகள் செயல்படுகின்றன. இங்கு இன்று காலை அனைத்து ஊழியர்களும் வந்து சேர்த்தனர். வேலை தொடங்கும்போது, திடீரென கரும்புகை வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். சிலர், அலுவலக ஜன்னலை திறந்து, அதன் வழியாக வெளியே குதித்தனர். சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.

தகவலறிந்து சட்டக்கல்லூரி, பேசின்பிரிட்ஜ், ராயபுரம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், இதுவரை முடியவில்லை. தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த திடீர் தீ விபத்தால், பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மற்றும் அருகில் உள்ள கடைக்காரர்கள் கண் எரிச்சல், மூச்சு திணறலால் கடும் அவதியடைந்து வருகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தீ பிடித்த கட்டடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

புகரின்படி வடக்கு கடற்கரை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கட்டடத்தில் உள்ள ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்து ஏற்பட்ட அந்த கட்டடத்தின் அருகே குடியிருப்புகளும் உள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.