தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணம்…. களமிறங்குகிறதா மோடி அரசு ? ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறார் மத்திய இணையமைச்சர்!!
டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே இன்று சென்னை வருகிறார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழுவை அனுப்புமாறு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, சேலம் உள்பட டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று சென்னை வருகிறார்.
நாளை காலை 8.30 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட்டு நலம் விசாரிக்க உள்ளதாகவும், டெங்குவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிவார் எனவும் தகவல் வெளியகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.