CBI probe into the death of a student who akanum TN

கோவை

தமிழக மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆதித் தமிழர் பேரவை மற்றும் கோவை மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்து கிருஷ்ணனின் சாவுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார்.

இங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆதித்தமிழர் பேரவையினர் 24 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்

இதேபோன்று, கோவை மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் கோவை மணி தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் கலைச்செல்வன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன், மண்டல செயலாளர் சு.சி.கலையரசன், தொகுதி செயலாளர் ம.வி.பாலசிங்கம், துணை செயலாளர் கோவை குரு, பொருளாளர் சை.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்து கிருஷ்ணனின் சாவுக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.