Cauvery water came to Bilegundu farmers are happay
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிக எல்லையான பிலிகுண்டடிவ வந்தடைந்தது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்குத்துக்கு மாறாக ஒரு வாரம் முன் கூட்டியே தொடங்கியது. கேரளாவிலும், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவ மழை, தற்போது சற்று குறைந்து இருக்கிறது.
அதே நேரத்தில் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது வரை தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கே.ஆர்.எஸ். ஹாரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 98.20 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 31,037 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 437 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு இதேபோன்று தொடர்ந்து நீடித்தால் இன்னும் 10 நாட்களில் அணை நிரம்பி விடும். கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 26.60 அடியே பாக்கி உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 2,282 அடியாக இருந்தது. இன்னும் 2 அடி நிரம்பினால் அணை முழுகொள்ளளவை எட்டிவிடும்.


கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று இரவு வந்து அடைந்தது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து விரைவில் மேட்டூர் அணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 39.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூரை வந்து சேரும் போது, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.
