காவிரி உயர்நிலை தொழில்நுட்ப குழுவினர் மேட்டூரில் அணையில் நீர்மட்டம் குறித்து ஆய்வை தொடங்கியது.
காவிரி பிரச்சனை தொடர்பான தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நிலை தொழில்நுட்பக் குழு அமைத்து காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்து,அக்டோபர் 17-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் உயர்நிலை தொழில்நுட்பக் குழுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்தது.
இதனைதொடர்ந்து கர்நாடக மாநிலம் சென்ற கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்தனர்.
பின்னர், தமிழகம் வந்த இக்குழுவினர் 2 நாட்கள் தமிழகத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்தநிலையில் இன்று, ஜி.எஸ்.ஜா. தலைமையிலான 14 பேர் கொண்ட குழு மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் தேவை குறித்து ஆய்வை தொடங்கியது. இதனிடையே, விவசாய நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிகின்றனர்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். தொடர்ந்து, நாளை காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் இந்த குழுவினர் ஆய்வை முடித்துவிட்டு, வரும் 17ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிகிறது.
