65 people arrested by Cauvery rescue crews

திருவாரூர்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி மன்னார்குடி அருகே இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 65 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

“காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தை கலைத்து விட்டு, அதன் இறுதி தீர்ப்பை இரத்து செய்யும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒற்றை தீர்ப்பாயத்தை திரும்ப பெற வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஒருவாரம் தொடர் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குறுவைமொழி என்ற இடத்தில் மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பயணிகள் இரயிலை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மறித்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிசெல்வன் தலைமை வகித்தார்.

இதில் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

காலை 9 மணியில் இருந்து 9.30 மணிவரை நடந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கைது செய்தனர்.