பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். எனினும் மாணவர்கள் மீண்டும் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அறிவுறுத்துதலின் படி சென்னை பெருநகர முழுவதும் நேற்று போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு தணிக்கை செய்யப்பட்டது.

அப்போது மாநகர பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களும் 43 கல்லூரி மாணவர்களையும் பேருந்துகளிலிருந்து கீழே இறக்கி விட்டு அந்த மாணவர்களின் பெயர் மற்றும் முழு முகவரி, பள்ளி மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து, அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பள்ளி கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்து கூறி போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினர். இதேபோல் கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக செல்லும் பெற்றோரை நிறுத்தி காவல் துறையினர் அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் பள்ளி நேரத்தில் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்தவர்கள் மீதும், ஆட்டோக்களில் அதிமாக மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஓட்டுநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மட்டும் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்று படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் மீது தகுந்த வழக்குகள் பதியப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர். பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கி விபத்தில்லா பாதுகாப்பான பயணம் மூலம் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
