மணல் லாரியை மறித்து பணம் கேட்டு மிரட்டல்; 12 பேர் மீது வழக்கு; அரசுப் பணிக்காக சென்ற லாரிக்கே இந்த நிலைமை...
கடலூர்
கடலூரில் அரசுப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட மணல் லாரியை மறித்து மிரட்டிப் பணம் கேட்ட 12 பேர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் செல்லும் கோமுகி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக அள்ளப்படும் மணலுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சேப்பாக்கம் அணுகுச் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற மூன்று மணல் லாரிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.அசோகன், ம.சமண்டியல்யன், க.பாலமுருகன் உள்ளிட்ட 12 பேர் மறித்தனர்.
அப்போது அவர்கள், இந்தப் பகுதி ஆற்றிலிருந்து மணல் அள்ளிச் செல்ல வேண்டுமெனில், தங்களது பகுதிக்குப் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, லாரியிலிருந்த சேப்பாக்கத்தைச் சேர்ந்த தர்மர் மகன் முருகன் (36) என்பவர், இது அரசுப் பணிக்காக அரசின் உத்தரவுப் பெற்றே எடுத்து செல்லப்படுகிறது. எனவே, பணம் தரமுடியாது என்று தெரிவித்தார். இதனால், அந்த மூன்று லாரிகளையும் அந்தப் பகுதியினர் சிறைபிடித்து வைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், வேப்பூர் காவல் துறையினர் அசோகன் உள்ளிட்ட 12 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தவும் காவலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.