தடைச் செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்ற நால்வர் மீது வழக்குப் பதிவு; டீலர்கள் குறித்து விசாரணை...
திருவள்ளூர்
திருவள்ளூரில் அரசால் தடைச் செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த நால்வர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்கப்படுகிறது என்ற தகவல் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்தது.
அந்த தகவலையடுத்து திருவள்ளூரில் உள்ள கடைகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க, காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உடனே உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் மப்பேடு , செவ்வாப்பேட்டை பகுதிகளில் காவலாளர்கள் நேற்று திடீரென ரோந்து பணி மேற்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் கடைகளில் குட்கா பொருள்கள் வைத்து விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தொழுவூர் குப்பத்தைச் சேர்ந்த நடராஜன் (60), இரயில் நிலையச் சாலையைச் சேர்ந்த பிரபாகரன் (27) பேரம்பாக்கம் தாமீன் (38), எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த குழந்தைவேல் (59) ஆகியோர் மீது மப்பேடு காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் நால்வரிடமும் போதைப் பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது பற்றியும் டீலர் குறித்தும் விசாராணை நடந்து வருகிறது.