இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ஷர்மிளாவுக்கு கார்: கோவையில் கமல் அரசியல் கணக்கு - பின்னணி என்ன?

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது. நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்ட விரோதமானது. அமைச்சர்கள் நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லா அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார்? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினாரா?” என சரமாரியாக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உயர் நீதிமன்றம், முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது என மறுத்து விட்டது. திமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.