வர்தாவால், 300க்கும் மேற்பட்ட மரங்கள் பலி…
அரக்கோணம்,
வர்தா புயலால், அரக்கோணம் பகுதியில் பெய்த புயல் மழையால் 300–க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து பலியாயின. அதிகாரிகளோடு சேர்ந்து மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் திங்கள்கிழமை புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அரக்கோணம் நகரம், சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சூறாவளிக் காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்தன.
300–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகள் மீது விழுந்ததால் கடும் சிரமம் ஏற்பட்டது.
அரக்கோணம் – மோசூர் சாலையில் கிறித்தவ ஆலயம் அருகே பெரிய மரம் ஒன்று நேற்று அதிகாலை சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சு.ரவி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன், தீயணைப்பு படை அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் லதா மற்றும் 20–க்கும் மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள், அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் சிறிது, சிறிதாக நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தக்கோலம் – அரக்கோணம் சாலையில், பேரம்பாக்கம் சாலையில், திருவலங்காடு இரயில் நிலையம் செல்லும் சாலை பகுதியில் 40 மரங்கள் சாய்ந்து விழுந்தது. சில மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
தக்கோலம் காவல் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் காவலாலர்கள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மரங்களை சாலைகளில் இருந்து அகற்றி சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
நாகவேடு மற்றும் அரக்கோணம் ஒன்றிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.
தாலுகா காவல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் அந்த பகுதி மக்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய மின்சார வாரிய ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரும்படி தாசில்தார் குமரவேலுவுடன் சு.ரவி எம்.எல்.ஏ பரிந்துரை கடிதம் கொடுத்து உள்ளார். வருவாய் துறை அலுவலர்கள் மனுவின் மீது ஆய்வு செய்து வருகின்றனர்.