பரனூர் சுங்கச்சாவடியில் அணிவகுத்து செல்லும் பேருந்துகள்; நெரிசல் இருந்தால் சுங்கவரி இல்லையாம்!!
பரனூர் சுங்கச்சாவடியில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
தீபாவளி பண்டிகையொட்டி ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும் நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதலாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் போக்குவரத்து சிக்கலில் சிக்காமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சுங்கச்சாவடியில் பேருந்துகள் செல்வதற்கு மட்டும் தனியாக இரு தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் அனைத்து வாகனங்களையும் சுங்கவரி இன்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள பரனூர், தொழுப்பேடு ஆகிய இரண்டு சுங்கசாவடிகளில் 2 டி.எஸ்.பி.கள் தலைமையில் 6 ஆய்வாளர்களின் கீழ் 200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்தார்.