bus accident in arani
ஆரணி அருகே திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, ஊர் திரும்பியவர்களின் வேன் மீது அந்த வழியாக எதிரே வந்த ஒரு தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில் வேன் தரையில் உருண்டுச் சென்று சாலையோரத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (60), பீடி சுற்றும் தொழிலாளி. இவருடைய மகன் மோகன் (27). இவர், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், கலசபாக்கத்தை அடுத்த பழங்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர்களின் திருமணத்துக்கான நிச்சயத்தார்த்தம் பழங்கோவில் கிராமத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்க மோகன் குடும்பத்தினரும், உறவினர்களும் மூன்று வேன்களில் 60–க்கும் மேற்பட்டோர் திருவத்திபுரத்தில் இருந்து பழங்கோவில் கிராமத்துக்குப் புறப்பட்டனர்.
அங்கு, திருமண நிச்சயத்தார்த்தம் முடிந்ததும், அவர்கள் அதே மூன்று வேன்களில் திருவத்திபுரத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
இரு வேன்களில் வந்த உறவினர்கள் முன்னால் வேகமாகச் சென்று விட்டனர். இரு வேன்களை பின் தொடர்ந்து மற்றொரு வேனில் உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர்.
போளூரை அடுத்த எட்டிவாடி கிராமத்துக்கு அருகே சாலையின் ஒரு வளைவில் வேன் வந்தது.
அதே வழித்தடத்தில் எதிரே வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையை நோக்கி வேகமாக வந்த ஒரு தனியார் பேருந்து, திடீரென வேனின் மீது அதிபயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைகுலைந்த வேன் இரண்டு முறை தரையில் உருண்டு சாலை ஓரத்தில் போய் விழுந்தது. வேனில் வந்தவர்கள் மரண ஓலமிட்டனர்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், விபத்து பற்றி தகவல் அறிந்த போளூர் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் திருவத்திபுரத்தைச் சேர்ந்த மணி (54), இவருடைய மனைவி கமலா (49), திருநாவுக்கரசு (65), லோகநாதன், மோகனின் தாயார் சரோஜா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வேனில் பயணம் செய்த சாமூண்டீஸ்வரி (37), கல்பனா (60), கல்யாணி (60), டேவிட் (45), சண்முகம் (50), தருமன் (62), கோவிந்தராஜ் (60), மோகனின் தந்தை கோபால் (60), ஹரி (18), ஷாலினி (20), கண்ணகி (47), அண்ணாதுரை (57) உள்பட 14 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
படுகாயம் அடைந்த மேற்கண்ட 12 பேரும் சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சந்திரா, வரலட்சுமி உள்பட 4 பேர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, களம்பூர் காவல் ஆய்வாளார் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் அல்லிராணி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திலும், போளூர் அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தினால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
