கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை; ரூ.15 ஆயிரம் அபேஸ்; திருடர்களுக்கு வலைவீச்சு...
திருநெல்வேலி
திருநெல்வேலி சந்திப்பில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள எஸ்.என். சாலையில் இரண்டு அச்சகம் நிறுவனங்கள் மற்றும் ஒரு மின்சாதன கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இதன் உரிமையாளர்கள் வழக்கம்போல கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலையில் கடைகளை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு அச்சக நிறுவனங்களில் இருந்தும் ரூ.15 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
மின்சாதன கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆனால் கடையில் பணம் இல்லாததால் மர்ம நபர்கள் அப்படியே சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் கைரேகை நிபுணர்கள் கொண்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து புகாரின்பேரில் குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.