குழுமோதலில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோரி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை சன்னல் கண்ணாடிகள், 108 அவசர கால ஊர்தி ஆகியவற்றை சேதப்படுத்திய மூன்று பேர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குத்தாலம் வட்டம், வழுவூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.கார்த்திகேயன், க.கணேசன், து.கார்த்தி ஆகியோர், சீர்காழி வட்டம், பூம்புகாரில் ஏற்பட்ட குழு மோதலில் காயமடைந்து, நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அறிந்து, மருத்துவமனையில் திரண்ட காயமடைந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அரசுப் பணியிலிருந்த மருத்துவர்களிடம் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், வாக்குவாதம் முற்றியதில் மருத்துவமனையின் சன்னல் கண்ணாடிகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 அவசர கால ஊர்தி ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து மருத்துவர் கொளஞ்சியப்பன் (36) காவலாளர்களிடம் அளித்த புகாரின்பேரில், குத்தாலம் வட்டம், நெய்குப்பை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (26), பெருஞ்சேரி, திருமஞ்சனவீதி மருதநாயகம் (36), தரங்கம்பாடி வட்டம், மேலபெரம்பூர், பிரதான சாலை சாந்தகுமார் (24) ஆகிய மூன்று பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

மேலும் சிலர் மீது வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.