செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக தொடர முடியாது என்று கூறி முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுத்துள்ளார்
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அந்த வகையில் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது. அதே போல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி இருந்தார்.
இந்த சூழலில் இலாகா மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதிய நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இலாகா மாற்றம் தொடர்பாக மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக தொடர முடியாது என்று கூறி முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுத்துள்ளார். அதாவது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுத்துள்ளார். எனினும் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

