பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வீடுகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில், இது ஒரு புரளி என்பது தெரியவந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மத வழிபாட்டுத் தலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகள் என பல்வேறு பகுதிகளுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் வீட்டுக்கு வெடுகுண்டு மிரட்டல்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் இல்லம் மற்றும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி ராமதாஸின் இல்லம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் வீடுகளுக்கும் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்தனர். அங்கு மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

வெறும் புரளி

பல மணி நேரச் சோதனைக்குப் பிறகு, இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. இதையடுத்து, போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து இந்த மிரட்டல் வந்தது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்குத் தொடர்ச்சியாக வரும் இந்த மிரட்டல் சம்பவங்கள், பொதுமக்களிடையேயும், அரசியல் வட்டாரத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.