மூத்த பத்திரிகையாளர்களரும், அரசியல் விமர்சகருமான மணி வீட்டிற்கு அடுத்தடுத்து இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் அண்மை காலமாக அரசியல் தலைவர்கள், விமான நிலையம், ரயில் நிலையம், சினிமா பிரபலங்கள் என பலரது வீடுகள், அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவலால் அதிகாரிகளுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியோடு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு அடுத்தடுத்து அது புரளி என்று உறுதி செய்யப்படுகிறது.

குறிப்பாக சென்னை விமான நிலையம், அதிமுக அலுவலகம், எடப்பாடி பழனிசாமி வீடு, தவெக தலைவர் விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் மணி யூடியூபில் அரசியல் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக தலைவர் விஜய் அமைதியாக இருப்பதால், “கரூர் களத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி கூட வேலை பார்க்கிறது. ஆனால் அசம்பாவிதத்திற்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் தவெக களத்திலேயே இல்லை. அது ஒரு கட்சியே இல்லை என்று கூறி பரபரப்பை எற்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக மணியின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த வாரமும் இவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.