Boat rides start after a month in the lake Tourists delight

தேனி

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் தேக்கடி ஏரியில் ஒரு மாதத்திற்கு பிறகு படகு சவாரி தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முக்கியச் சுற்றுலாத் தலமாக உள்ளது தேக்கடி ஏரி. தமிழக – கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள தேக்கடி ஏரிக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறூம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு ஏரியில் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு சிறிய படகுகளும், ஒரு பெரிய படகும், மின்சாரத்துறை சார்பில் இரண்டு சிறிய படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து அணைப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு விலங்குகளை பார்த்து இரசிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் தேக்கடி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் அணையில் உள்ள திட்டுகள், கட்டைகள் வெளியே தெரிந்தன. எனவே, கடந்த மாதம் 28–ஆம் தேதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஒரு மாதமாக படகுகள் கரை பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனிடையில் கடந்த நான்கு நாள்களாக முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால் தேக்கடி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நான்கு சிறிய படகுகள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு பிறகு படகு சவாரி தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் சவாரி செய்து வருகின்றனர். மேலும், நீர்மட்டம் உயர்ந்தவுடன் பெரிய படகுகள் இயக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.