Block Online Business - CITU protest in thiruvarur
திருவாரூர்
ஆன்லைன் வர்த்தகத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பாண்டியன், மாவட்டத் துணைத்தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் முருகையன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில், "ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
உளுந்தம் பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
பொதுவிநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அனிபா, தையல் கலைத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாலதி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன்,
சி.ஐ.டி.யூ. மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம், பால் விற்பனையாளர் சங்க மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாநிதி, கூட்டுறவு சங்க மாநில இணைச் செயலாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.
