நாமக்கல்லில் நடைபெற்றது கிட்னி திருட்டு கிடையாது, முறைகேடு என சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா என மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கிட்னி திருட்டு தொடர்பாக கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர், ஒருவருக்கு தெரியாமல் நடைபெற்றால் தான் அதனை திருட்டு என்று சொல்ல முடியும். இங்கு நடைபெற்றுள்ளது முறைகேடு.
மேலும் இது கடந்த 2019ம் ஆண்டிலேயே நடைபெற்றுள்ளது. அப்போது முதல்வராக இருந்தது எடப்பாடி பழனிசாமி தான். தற்போது அதற்கும் சேர்த்து தான் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சரின் விளக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது “கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு”; இதைச் சொல்வது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் அவர்கள்.
ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
சரி, நீங்கள் சொல்லும் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?
இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
