பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலியில் தனது பெயரில் தொடங்கப்பட்ட நற்பணி மன்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்துவதைக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது ஆதரவாளர்கள் தொடங்கிய நற்பணி மன்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது பெயரை இதுபோல பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் 'அண்ணாமலை நற்பணி மன்றம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது. மன்றத்தின் நிறுவனத் தலைவர் நெல்லை வேல்கண்ணன் இம்மன்றத்திற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அண்ணாமலை விளக்கம்

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நிலையில், தனது பெயரில் மன்றம் தொடங்கப்பட்டது குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

உடனடியாக கைவிட கோரிக்கை

எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்."

இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.