பைக்ரேஸில் ஈடுபட்டு கைதான இளைஞருக்கு சென்ன உயர்நீதிமன்றம் வினோத தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பைக்ரேஸில் ஈடுபட்டு கைதான இளைஞருக்கு சென்ன உயர்நீதிமன்றம் வினோத தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து மூலக்கொத்தளத்திற்கு இளைஞர்கள் சிலர் கடந்த 21 ஆம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அதில் சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த 21 வயதான பிரவீன் அந்த பைக் ரேஸில் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் என்பவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரவீன் உள்பட நான்கு பேரை கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரவீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது மனுதாரர் தரப்பில், அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

பின்னர், மனுதாரர் பிரவீன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாத காலம் பணியாற்ற வேண்டும். தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாத கால பணி முடிந்ததும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பிரவீன் மேற்கொண்ட பணி குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த நீதிபதி, பிரவீனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.