எக்ஸாக்ட்லி இது ஒரு சர்வாதிகார அத்துமீறல் : குரல் கொடுக்க தயாராகிறது பாரதிராஜா குரூப்...
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகின் உணர்ச்சி மிகு படைப்பாளிகள் இன்று பொதுவெளியில் கண்டனம் தெரிவிக்க திரள்கிறார்கள். இது ஒரு நாள் அடையாள கண்டனமாக கடந்துவிடுமா அல்லது கொண்ட கொள்கையில் அதே உணர்வுடன் தொடர்வார்களா? என்று யோசிக்க வைக்கிறது...
2009_ல் ஈழத்தில் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் மே 17 இயக்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரீனாவில் நிகழ்வை நடத்தி வந்தார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த 21-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்த திட்டமிட்டனர். ஆனால் போலீஸ் அனுமதி தரவில்லை. தடையை மீறி நிகழ்வு நடத்த முயன்று கைதானார்கள்.
புழல் சிறையிலிருந்த இவர்களில் திருமுருகன் காந்தி, தமிழர் விடுதலைக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாநிலம் முழுவதுமிருண்டு கண்டனக் குரல்கள் கிளம்பியுள்ளன. இதில் திரையுலகை சேர்ந்த உணர்வாளர்களும் கைகோர்த்துள்ளனர். இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர், தங்கர்பச்சான், பாலாஜி சக்திவேல், கெளதமன், நடிகை ரோகினி, ராம், சிம்புதேவன், சுந்தர்ராஜன் ஆகியோர் இன்று பொதுவெளிக்கு வந்து மேற்படி சட்டப்பாய்ச்சலுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று மீடியாக்களை சந்தித்து அவர்களின் மூலம் மாநில மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களை எடுத்து வைக்க இருக்கிறார்கள்.
அரசியல் மற்றும் பொது பிரச்னைகளில் தடாலடி கருத்துக்களை தெரிவிப்பதும், அரசியலுக்குள் இருப்பது போலவோ அல்லது வருவது போலவோ காட்சிகளை உருவாக்குவதும் சமீப காலமாக தமிழக திரைத்துறை புள்ளிகளுக்கு ஒரு மேனியாவாக இருக்கிறது. அது சுயநல செயலாகவும் பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திரைத்துறை முக்கிய புள்ளிகளின் குரல் இறுதி வரை தொடர்ந்து ஒலிக்குமா அல்லது ஒரு நாள் அடையாளக்குரலாய் கடந்து செல்லுமா என்று கவனிப்போம். திரை ஆளுமைகளுக்கு தலைமையேற்று இன்று பேசப்போகும் பாரதிராஜா ‘எக்ஸாக்ட்லி இது ஒரு சர்வாதிகார அத்துமீறல். கொல்லப்பட்ட என் சொந்தங்களுக்காக கண்ணீர் விடுவது என்னோட அடிப்படை ரைட்ஸ்யா. இதுக்கு கூட தடை சொன்ன வேர் இஸ் தி ஹூமானிட்டி?” என்று தமிழர்களுக்காக தமிழுணர்வு பொங்க தொடர்ந்து பேசுவாரா அல்லது இன்றோடு முடித்துக் கொள்வாரா என்று நிச்சயம் கவனிக்கப்படுவார்.