beef markets Dull modi ban beef business loss

மோடியின் இறைச்சி விற்பனைத் தடை உத்தரவால் மாட்டுச் சந்தை டல் அடித்தன. விற்பனைக்கு வந்த மாட்டின் வரத்து குறைந்து மந்தமாகவே இருந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நாகர்கோவில் சரலூரில் இந்துக் கல்லூரி அருகிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான சந்தையிலும், வெள்ளிக்கிழமையில் படந்தாலுமூட்டில் உள்ள சந்தையிலும், திங்கட்கிழமையில் திங்கள் சந்தையில் உள்ள சந்தையிலும் மாடு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் மத்திய அரசு, சந்தைகளில் இறைச்சிக்காக மாடு விற்கக்கூடாது என்று அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்ப்பு பல்வேறு கருத்துகளும், பல இடங்களில் போராட்டமும் நடந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த உத்தரவால் மாட்டுச் சந்தைகளில் மாடு விற்பனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் சரலூரில் உள்ள மாட்டுச் சந்தையில் விற்பனை வியாழக்கிழமைதோறும் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி 6.30 மணிக்கு முடிவடைந்து விடுவது வழக்கம்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதிலும் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம், மயிலாடி, தாமரைக்குளம், ஈத்தாமொழி பகுதிகளைச் சேர்ந்த மாடுகள்தான் இந்த சந்தையில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டுவருவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 60 அல்லது 70 மாடுகள்தான் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. அவ்வாறு விற்பனைக்கு வரும் மாடுகளை குமரி மேற்கு மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மத்திய அரசின் இறைச்சித் தடை உத்தரவுக்குப்பிறகு நாகர்கோவில் சரலூர் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. ஆனால், வழக்கமாக வரக்கூடிய மாடுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவாகவே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 30 மாடுகளே விற்பனைக்கு வந்திருந்தன.

அதேபோல் மாடுகளை வாங்க வந்த வியாபாரிகளும் குறைவாகவே வந்திருந்தனர். ஆனாலும் நேற்று சந்தைக்கு விற்பனைக்கு வந்த 30 மாடுகளும் விற்பனை செய்யப்பட்டன. விற்பனைக்கு குறைவான மாடுகள் வந்ததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி சந்தை குத்தகைதாரர் கூறியது:

நாகர்கோவில் சரலூர் மாட்டுச் சந்தைக்கு வழக்கமாக வரும் மாடுகளை விட குறைவான எண்ணிக்கையில்தான் நேற்று மாடுகள் வந்தன. அதாவது 30 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. எனினும் சந்தைக்கு வந்த 30 மாடுகளும் விற்பனையானது.

மத்திய அரசு போட்டுள்ள தடையின் காரணமாக மாடுகளை விற்பனை செய்ய வந்தவர்களின் எண்ணிக்கையும், வாங்க வந்த வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.