வேடந்தாங்கல் சரணாலயம் அருகே உள்ள மருந்து தயாரிக்கும் சன் பாா்மா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடைவிதித்து தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

வேடந்தாங்கல் சரணாலயம் அருகே உள்ள மருந்து தயாரிக்கும் சன் பாா்மா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடைவிதித்து தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. அதன் அருகே மருந்து தயாரிக்கும் நிறுவனமான சன் பாா்மா செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கூடுதலாக மருந்து உற்பத்தி செய்வதற்கான விரிவாக்க பணிக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 3.7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சரணாலயத்தைச் சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் பரப்பளவும் சரணாலயமாக கருதப்படுவதாக தமிழ்நாடு அரசு 1998 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏதேனும் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் தேசிய வன உயிா் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதிகள் உள்ளது. இந்த நிலையில், சன் பாா்மா நிறுவனம் இதுவரை வன உயிா் வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனவும், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் விரிவாக்க பணிக்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேசிய தென் மண்டல பசுமை தீா்ப்பாயத்தில் தியாகராஜன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினா் சத்ய கோபால் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் சன் பாா்மா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அதுவரை தற்போது உள்ள நிலையிலேயே விரிவாக்க பணி நிறுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்காக வழக்கை தள்ளிவைத்து தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.