ஜாக்டோ-ஜியோ சார்பில் மீண்டும் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் எச்சரிக்கை…
சிவகங்கை
ஊதியக்குழு அறிவிப்பில் உள்ள குறைபாடுகளை களையாவிட்டால் ஜாக்டோ-ஜியோ சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஊதியக்குழு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. 21 ஆண்டுகளாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஊதியம் ஆறாவது ஊதியக் குழுவில் மறுக்கப்பட்டதால் அடிப்படை ஊதியத்திலேயே மாதம் ஆறாயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம்.
ஏழாவது ஊதியக் குழுவின்போது முரண்பாடுகள் முற்றிலும் களையப்படும் என 2011 தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார்.
ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட ஊதியக்குழு அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை. இதனால் அடிப்படை ஊதியத்தில் ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைச் சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும்.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல் 2016 ஜனவரி முதல் 21 மாதங்களுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை 18 ஆயிரத்தில் இருந்த 21 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. ஆனால், தமிழக அரசு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15700 ஆக நிர்ணயித்துள்ளது.
ஊதியக்குழு அறிவிப்பில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். இல்லாவிட்டால் ஜாக்டோ-ஜியோ சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்” என்று அதில், அவர் தெரிவித்து இருந்தார்.