ஊழல் புகாரில் சிக்கிய ஆவின் சேல்ஸ் மேனேஜர்... சென்னைக்கு இடமாற்றம்... அதிரடி நடவடிக்கை!!
கோவை ஆவின் நிறுவனத்தில் ஊழல் புகாரில் சிக்கிய ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சென்னைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆவின் நிறுவனத்தில் ஊழல் புகாரில் சிக்கிய ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சென்னைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணையும், ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை ஆவினில் கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கீதா என்பவர் விற்பனை பிரிவில் மேலாளராக பணியில் சேர்ந்தார்.
இவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து அதற்கான பணத்தை கணக்கில் கட்டவில்லை எனவும், முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், கடந்த மாதம் சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் 4 நாட்கள் கோவை ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். இந்த முறைகேடு புகாரின் அடிப்படையில், கோவை ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா மற்றும் மண்டல விற்பனை அலுவலர்கள் சுப்ரமணியம், ஜீவிதா, சாமிநாதன் போன்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பால் பொருட்கள் விற்பனை செய்ததில் ரூ.60 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், முறைகேடு தொடர்பான பல்வேறு ஆவணங்கள், யார் யாருக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் பெற்று கொண்டனர். இந்நிலையில், தற்போது ஊழல் புகாரில் சிக்கிய கோவை ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா சென்னைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.