விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு..! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல்நாளே பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
2022 - 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது. ஒரு மாத விடுமுறைக்கு பின் ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 5 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்ததன் காரணமாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களிலும் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்ததது.
வெயில் தாக்கம் மாணவர்கள் பாதிப்பு
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது.
அதன்படி கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் செயல்பட தொடங்குகிறது. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி நிர்வாகங்களில் சார்பில் பள்ளிகளை தூய்மைப்படுத்துதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் 6 ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ,ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
பாட புத்தகம் வழங்க உத்தரவு
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைய தினமே பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சீருடைகள் அணிந்திருந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மீண்டும் விபத்தில் சிக்கிய சென்னை புறநகர் மின்சார ரயில்...! காரணம் என்ன.?