- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது குண்டர் சட்டம்.. சட்டம் சொல்வது என்ன? இதை படிங்க!
தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது குண்டர் சட்டம்.. சட்டம் சொல்வது என்ன? இதை படிங்க!
பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதும், கறுப்புச் சந்தையில் விற்பதும் கடுமையான குற்றமாகும். ஆகையால் இவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போரால் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வணிக சிலிண்டர் விலை திடீரென உயர்ந்தது மட்டுமல்லாமல், அதன் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டு சிலிண்டர்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு பல்வேறு கேஸ் ஏஜென்சிகள் கேஸ் சப்ளையை நிறுத்தி வைத்துள்ளன.
ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஹோட்டல்கள் இயங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் உணவுகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என பல்வேறு இடங்களில் ஹோட்டல்கள் இயங்க முடியாத நிலை உள்ளது. ஏராளமான ஹோட்டல்கள் மெனுவை குறைத்து விட்டன.
சிலிண்டர்களை பதுக்கிய 2 பேர் கைது
இதேபோல் தமிழகம் முழுவதும் கேஸ் ஏஜென்சிகள் வீட்டு சிலிண்டகள் சப்ளையை நிறுத்தி வைத்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக கேஸ் சிலிண்டர் பதுக்கிய 2 பேர் மீது கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதாவது கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 209 கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கைது செய்யப்பட்டார்.
சிலிண்டர்கள் பதுக்குவது குற்றம்
இதேபோல் 189 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இருவரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதும், கறுப்புச் சந்தையில் விற்பதும் கடுமையான குற்றமாகும். ஆகையால் இவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தண்டனை கிடைக்கும்?
மத்திய அரசு தற்போது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act, 1955) அமல்படுத்தியுள்ளதால், சிலிண்டர் பதுக்கல் என்பது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஓராண்டு வரை ஜாமீன் பெற முடியாது. சிலிண்டர் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்றல் போன்ற குற்றங்களுக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஆகவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

