நகை திருட்டில் தொடர்புடைய 2 பேர் கைது - 33 சவரன் நகை பறிமுதல்...
கோவில்பட்டி அருகே நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் 33 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடர் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
இதைதொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு பேரும் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர்.
பின்னர், போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில்அவர்களின் பெயர் பிரதீப்குமார், வெற்றிவேல் என்பதும், அடிக்கடி நகை திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 33 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.