சூர்யா, சத்யராஜுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் - பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் அதிரடி
தமிழ் சினிமா கலைஞர்களுக்கு இது போதாத காலம் போல... மூத்த கலைஞர்கள் தொடங்கி, நேற்று சினிமாவில் நடித்த பலரும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த வரிசையில் 2009 ல் தொடரப்பட்ட வழக்கில் நீலகிரி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு திரைப்பிரபலங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நடிகை புவேனஸ்வரி சர்ச்சையில் சிக்கிய போது அது குறித்து பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நடிகர்கள் சூர்யா, சரத்குமார், விஜயகுமார், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட நடிகர்கள், பத்திரிகையாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும், பத்திரிகை ஆர்வலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் ஆஜராகும்படி நடிகர் சூர்யா, சரத்குமார், உள்ளிட்ட 8 பேருக்கு ஊட்டி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் விசாரணைக்கு நடிகர்கள் ஆஜராகாததால், சூர்யா, சரத்குமார், விஜயகுமார், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ளது