முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம், பேரறிவாளனின் தாயார் கேட்டு கொண்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவிடம் அற்புதம் மாள் பலமுறை கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நேற்று தலைமை செயலகம் சென்ற அற்புதம்மாள், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். பின்னர், அவர் செய்தியளார்களிடம் கூறியதாவது:-
எனது மகன் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவார்கள் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2 முறை அறிவித்தார். ஆனால், அது தடைபட்டுவிட்டது. இனிமேலும் தடையாகக் கூடாது. என் கணவரும் நோயாளியாகிவிட்டார். மகனும் (பேரறிவாளன்) நோயாளியாகிவிட்டான்.

எனவே, எப்படியாவது அவனது விடு தலைக்கு முயற்சி எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கூறினேன். விரைவாக என் மகனை விடுதலை செய்து என்னிடம் தாருங்கள் என்று கேட்டு கொண்டேன். எனக்கும் உடல்நிலை சரியில்லை. எங்களுக்கு சக்தி இருக்கும்போதே மகன் எங்களுடன் கொஞ்ச நாளைக்காவது வாழ வேண்டும் என்று கேட்டேன்.

அதற்கு முதல்வர், ‘இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் ஆலோசித்து வருகிறோம்’ என்று கூறினார். அந்த பதிலே எனக்கு திருப்தியாக இருந்தது. நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக என் மகன் சிறையில் அடைபட்டு இருக்கிறான். அவனுக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என பலரும் கூறிவிட்டனர். அனைவருமே இந்த வழக்கில் இருப்பவர்களை விடு தலை செய்ய வேண்டும் என்று கோரி வருகிறோம்.
சட்டத்தில், நீதியில் அடங்காமல் இவர்களது தண்டனைக்காலம் போய்க் கொண்டே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.

தற்போது 7, 10, 14 ஆண்டுகள் தண்டனை முடிந்தவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தீர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த சட்டப்பிரிவின்கீழ் தண்டனை பெற்றிருந்தாலும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யலாம் என தீர்ப்பு வந்துள்ள தாக தெரிகிறது. அதன்படி, எனது மகன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதையே அனைவரும் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
