படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, கணவர் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் ஆதரவு பெருகிவரும் நிலையில், எதிர் கூட்டணியில் உள்ள திருமாவளவன் பொற்கொடியின் உயிருக்கு ஆபத்து.

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் திருவிக நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். தன்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று பொற்கொடி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கிறது. பொற்கொடிக்கு ஆதரவாக பா.ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.

பொற்கொடிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பு திமுக கூட்டணிக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதனால், தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி தரப்படுவதாக பொற்கொடி கூறியிருந்தார். இந்நிலையில் திருமாவளவனும் பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில்: கணவர் இறந்தவுடன் பொற்கொடி வீட்டிற்குள் முடங்கி விடாமல் துணிச்சலாக பொது வாழ்விற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

இது போன்று பெண்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கணவர் இறப்புக்கு நீதி கோரி போராடிவரும் பெற்கொடியையும், அவரது அரசியல் வருகையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவருக்கு பாதுகாப்பு தேவை. அவர் துணிச்சலுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், அரசியலில் அவருக்கு ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை எதிர்க் கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவன் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார். இனியாவது காவல் துறை பொற்கொடிக்கு போதிய பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும் என்று அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கோரிக்கை வைக்கிறார்கள். கலகம், அசம்பாவிதம் செய்து, அச்சமூட்டினால் பொற்கொடி தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்று திமுகவினர் நினப்பது நடக்காது என்று பொற்கொடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள்.